Thursday, January 29, 2009

கற்பு - ஒழுக்கம் - பாலுறவு:
புனைவுகள்
என்.சரவணன்

பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக­ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம்.


இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்­றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி­னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், போpனவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்­பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன.

இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம்.

இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்­குள்­ளான பெண்ணை ஆபாசமான உடைய­ணிந்­திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது.

எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது.

பெண்ணின் உயிhpயல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன.


ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன.

தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்­டுள்­ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க­ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்­பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா­னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்­துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்­தி­ருக்­கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்­பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது.

ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட­மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே­யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்­தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது.

எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது.

இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன.

பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம­லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள்,

ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்­குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்­பையும் ஏற்படுத்தியுள்­ளது.

பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை­வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்­துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது.

அதே வேளை இதே யோனி புனிதம் கெடா­மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்­புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா­டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ­ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக­ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்­டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை­யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்­பட்டுள்ளன.



இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்­பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே.

எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை­யும் ஏற்படுத்தியது.

எதிர்பாலுறவுக்­கூடாகத்­தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா­கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக­வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்­துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்­புக்­குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்­டுள்ளாள். இப்படியான பொறுப்­பு­க­ளி­­லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்­பட்ட அருவருப்புகள், வெறுப்­புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்­பட இருக்கிறது.

எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்­குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு­கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்­படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்­படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது.

பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும்.

இன்றைய பெண்கள் மீதான வன்முறைக­ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு­முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்­கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster