Wednesday, January 28, 2009
போரின் கருவியாக
பாலியல் வல்லுறவு:
பாலியல் வல்லுறவு:

என்.சரவணன்
ஸ்ரீலங்கா அரசின் சிங்கள இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போரில் பொது மக்களை ஏமாற்றி மசிய வைக்க ஒரு தடவை பேச்சுவார்த்தை சமாதான நாடகமாடியது. உலக நாடுகளை தம்பக்கம் ஈர்ப்பதற்காக தீர்வுப் பொதி நாடகம் ஆடியது. இன்று சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பின் தமிழ் மக்கள் குறித்தும் வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பேரினவாதக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது ஆதிக்க விரும்பினாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்பு அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமாதான முயற்சி, பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம், தீர்வு என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராகி வருவதை தென்னிலங்கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போரை நடத்தியேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு-பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பொருள் விலையுயர்வு, தீர்வைகளின் அதிகாpப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றைக் கூட போரின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.
அரசின் அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்று போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட் நிலையில் தான் போரின் எதிர் விளைவுகளை சந்திப்பதாயிருந்தால் படையினரை உற்சாகப்படுத்தியே ஆக வேண்டும். படையினரின் உயிரிழப்புகள், படையின் ஏனைய பொருளிழப்புகள், முகாம் இழப்புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறுவோரின் தொகை அதிகரித்து வருகின்ற அதே நேரம் புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்கையில் வீடுகளில் பெற்றோரை மிரட்டுகின்ற பேச்சாகவே ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பதைக் காண முடிகிறது.
இந்த நிலையில் உள்ள படையினரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகைளைக் கையாள்கிறது. படையில் இணைவோருக்கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமானவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்படுத்தாமை என்பது.
அந்த போர்க்கால குற்றங்களில் பாhpய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்மைகள் உள்ளன.
இதற்கான உள்ளார்ந்த அனுமதி படையில் இருப்பதை நிலைமைகள் வெளிக்காட்டியுள்ளன. இது பெரியளவில் பிரச்சாரப்படாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு படையில் இருப்பதையே காட்டுகிறது.
1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேசமாகவே ஆக்கி வந்தது. வெளியுலகத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்படுத்தியும் வந்தது.
போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படையினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடுண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனோர்கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.
மனித உரிமைகள் அமைப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு மாத்திரம் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த போது அதனை முறையாக எதிர்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் படையினராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை.
பொதுவாக போர்க்காலங்களில் இந்த பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்ளாக்க எதிர்த் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்களுக்கென்று தனியான முகாமமைத்து அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற வைத்தனர். பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப் படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னியர்களுக்கு அறிவித்தார்கள்.
இப்படி யுத்த காலங்களில் எதிர்த் தரப்பின் பெண்கள் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும் பலருக்கான பாலியல் போகப்பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைகளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கியது.
எதிர் நாட்டுப் படையினர் மீது நடத்தப்பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்பவங்களே இலங்கையிலும் நடந்து வருகின்றன.
அண்மையில் கூட இந்தோனேசியாவில் சுகர்னோ அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
இன்று நடக்கும் யுத்தம் எதிர் நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் தெளிவுறுத்தியது இதே அரச படை தான். இராணுவத்தின் ஆட்சேர்ப்பு தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டையாடப்படல் என்பவற்றின் வெளிப்பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிர்ப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் உள்ளாகினர்.
ஸ்ரீ லங்கா படையை அப்படி சிங்களப் படை, எதிர்ப் படையென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் அடைந்திருக்கிறது.
(சிங்களப் படையென்ற சொல் இனவாதத்தை வெளிப்படுத்துவதாக சொல்கிறார்கள் ஆனால் சிங்களவர்களை மட்டுமே கொண்ட படையாகவும் எதிர் நாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாலும் இப்பதம் பொறுத்தமானதே)
எனவே இப்படிப்பட்ட சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமானப்படுத்த பயன்படுத்துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.
ஆனால் தற்செயலாக கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்பாக அமைந்ததால்) அது உலக அளவில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.
தவிர்க்க இயலாமல் இதனைப் பயன்படுத்தி அரசு போர்க் குற்றங்களுக்கு எதிராக எப்போதும் இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்காக கிருஷாந்தி வழக்குக்கு அரச முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதைச் சொல்லியே அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது கரிசனையை பிரச்சாரப்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சமூக அளவிலும் அந்தஸ்துடையவர்கள் அல்லர்.
இன்று வெளிக் கொணரப்படுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டுமெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.
இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்திலும் பெண் அதிக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாள்.
97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையினரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வரி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து தகர்த்தனர். பெரும்பாலும் பாலியல் வல்லறவின் பின் கொலையும் செய்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்விடுமென்றே சிங்களப் படையினர் கருதியிருப்பர்.
இதை விட இது வரை காலம் போரின் போது கைது செய்யப்பட்ட பெண் புலிகள் பலரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. இன்று அப்படிப்பட்ட தகவல்கள் பெறுவது கடினமாக இருக்கிறது. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலுறுப்புகளில் போத்தல்களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்துகின்ற புகைப்படங்களின் மூலம் கடந்த அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கத்திலும் இடம் பெற்று வருவதை காண முடிகிறது. குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.
இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன?
குறிப்பிட்ட சமூகத்தை அவமானப்படுத்தி விட்டதன் களிப்பையல்லவா?
ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்டாத இன்னொருவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவருக்கு கிட்டிய பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவேன் என்று கூறினாலே மற்றவர் ஆத்திரப்படுவார் அல்லவா?
அப்படிப்பட்ட வெளிப்பாடொன்றே இந்த நிர்வாணக் காட்சிப்படுத்தலும்.
”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்தின் சர்வதேச பிரச்சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமைகளின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகரித்திருப்பதே.
அரசு இவ்வாறான இம்சைகளின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வினை ஏற்கச் செய்கின்ற நடவடிக்கையாக, போரின் கருவியாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொடராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.
(பாலியல் வல்லுறவுக்குள்ளான பல தமிழ்ப் பெண்களின் விபரங்களும் இப்பத்திரிகையில் அடங்கியுள்ளன.)
(சரிநிகர் 158)
0 comments: to “ ”
Post a Comment